மூலிகைகள்

கண் பார்வையை தெளிவாக்கும் பொன்னாங்கண்ணி கீரை

பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி கீரை மென்மையான இலைகளையும் வெண்மையான பூக்களையும் உடையது. நம் முன்னோர்கள் சமையலில் அடிக்கடி பயன்படுத்தி வந்த கீரையாகும். பொன் போன்ற மேனியை தருவதால் இதனை பொன்னாங்கண்ணி எனப்பட்டது. இதில் பச்சை, சிவப்பு என இரண்டு வகை உண்டு. நாட்டு பொன்னாங்கண்ணி சிறிய இலைகளை கொண்டது பச்சை நிறத்தில் காணப்படும்.

குணம்

உடலுக்கு குளிர்ச்சியை தரும், இரத்தத்தை உண்டாக்கும், உடலை பொன்னிறமாகும், வயிற்று புண்ணை ஆற்றும், நரம்புகளுக்கு வலிமை தரும்.

இரத்த சோகை

காமாலை, இரத்த சோகைக்கு சிறந்த மருந்தாகும். பொன்னாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து 50மில்லி காலை வேலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 10 நாட்களில் இரத்த சோகை, காமாலை நோய்கள் குணமாகும்.

கை, கால் வீக்கம் குறைய

உடலில் அதிகளவு உப்பு சேர்ந்து கை, கால், வயிறு வீங்கி இருந்தால் பொன்னாங்கண்ணி சாற்றை எடுத்து 50 மிலி அளவு 30 நாட்கள் சாப்பிட குணமாகும்.

மஞ்சள் காமாலை குணமாக்கும்

கீழாநெல்லியுடன் பொன்னாங்கண்ணி கீரையை சமஅளவு எடுத்து அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவர மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

உடல் வலிமை பெற

பொன்னாங்கண்ணி சாறு சமஅளவு நெய் அதில் சிறிதளவு திப்பிலி, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து சுண்டக் காய்ச்சி 5 மில்லி அளவு தினமும் 30 நாட்களுக்கு சாப்பிட்ட வர உடல் நல்ல வலிமை பெறும். சளி, இருமல், இரத்த சோகை ஆகியவை குணமாகும்.

கண் எரிச்சல் நீங்க, கண் பார்வை தெளிவு பெற

பொன்னாங்கண்ணி சாறு 100மிலி, நெல்லிக்காய் சாறு 100மிலி, கீழாநெல்லி சாறு 50மிலி, நல்லெண்ணெய் 250 மிலி
இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து காய்ச்சி நல்ல பதத்தில் இறக்கி வைத்துக்கொண்டு தினமும் தலைக்கு மஜாஜ் போன்று தேய்த்து வந்தால் கண் எரிச்சல் நீங்கும்.

கண்களுக்கு குளிச்சியை தரும் கண் பார்வை தெளிவு பெறும். மேலும் பொடுகு, தலை அரிப்பு இவை அனைத்தும் நீங்கும்.

பொன்னாங்கண்ணி கீரை கூட்டு

பொன்னாங்கண்ணி கீரையை பருப்புடன் சேர்த்து சிறிது நெய் ஊற்றி கடைந்து சாப்பிட்டால் இதன் சுவைக்கு வேறு எதுவும் நிகர் இல்லை.

தலைமுடிக்கு பொன்னாங்கண்ணி தைலம்

தலைமுடி பிரச்சனைகளுக்கு பொன்னாங்கண்ணி தைலம் சிறந்ததாகும். பொன்னாங்கண்ணி சாறு 250மிலி தேங்காய் எண்ணெய் 1/2 லிட்டர் சேர்த்து அதில் ரோஜா இதழ்களை போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு. தினமும் தலைக்கு தேய்த்து வர உடலுக்கு நல்ல குளிர்ச்சி உண்டாகும். கண்ணொளி பெருகும். இளநரை போகும். முடி உதிர்வது குறைந்து நல்ல அடர்த்தி உண்டாகும்.

அரிப்பு, கரப்பான் குணமாக

பொன்னாங்கண்ணி வேர், கோவை கிழங்கு வேர் இரண்டையும் சமஅளவு எடுத்து அரைத்து மோரில் போட்டு சாப்பிட்டு வர மண்டை கரப்பான், சொரி, நமைச்சல், அரிப்பு, சிரங்கு, உஷ்ண கட்டிகள் இவைகள் அனைத்தும் 10 நாட்களில் குணமாகும்.

பித்த நோய்கள் தீர

நெல்லிக்காய் சாறு, பொன்னாங்கண்ணி சாறு, தலா 10மிலி வீதம் அதனுடன் 5 மிலி இஞ்சி சாறு சேர்த்து சீரகம், ஓமம் அரைத்த விழுது 5 கிராம் சேர்த்து இரண்டு வாரங்களுக்கு தினமும் காலையில் சாப்பிட்டு வர பித்த நோய்கள் அனைத்தும் தீரும்.

மேலும் மயக்கம், உடல் சோர்வு, வயிற்று பிரச்சினை, கிறுகிறுப்பு, கல்லீரல் அழற்சி, இரத்த அழுத்தம் ஆகிய அனைத்தும் நீங்கும்.

சிறுநீர்க் கடுப்பு

சிறுநீர் கடுப்பும் எரிச்சலும் ஏற்பட்டால் 10மிலி பொன்னாங்கண்ணி சாறு பருக குணமாகும். மேலும் வயிற்று வலி, வயிற்று எரிச்சல் ஆகியவை குணமாகும்.

பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் உடல் பொன்போல் ஆகும். பொன்னாங்கண்ணியிடன் புளி சேர்த்து சமைத்து சாப்பிட்டால் நல்ல ருசியாக இருக்கும் ஆனால் மருத்துவ பயன் ஏதும் கிடைக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 4 =

error: Content is protected !!