டெங்கு காய்ச்சலை விரட்டியடிக்கும் நிலவேம்பு கஷாயம் – செய்முறை மற்றும் பயன்கள்!!

நிலவேம்பு கஷாயம் என்பது ஒன்பது வகைகளான மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் அருமருந்தாகும். மழைக் காலத்தில் அதிகம் ஏற்படும் டெங்கு காய்ச்சலுக்கு இது சிறந்த மருந்தாக திகழ்கிறது என தமிழக அரசே பல இடங்களில் இந்த கஷாயத்தை மக்களுக்கு வழங்கி வருகிறது.
டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி, தலைவலி, செரிமானம், மூட்டு வலி, நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு என பல பிரச்சனைகளுக்கு இந்த நிலவேம்பு கஷாயம் நல்ல தீர்வளிக்க கூடியது. எடுத்ததும் ஆங்கில மருத்துவத்தை தேடி ஓடாமல், சிறந்த இயற்கை மருந்தாக விளங்கும் இந்த நிலவேம்பு கஷாயத்தை குடித்து பயனடையுங்கள்….
தேவையான மூலிகைகள்
நிலவேம்பு கஷாயம் தயாரிக்க தேவையான ஒன்பது மூலிகைகள்: சிறியாநங்கை (நிலவேம்பு), வெட்டிவேர், விலாமிச்சம் வேர், பற்படாகம், பேய்புடல், கோரைக் கிழங்கு, சந்தனச்சிறாய், சுக்கு, மிளகு
செய்முறை
நாம் மேலே கூறியுள்ள ஒன்பது மூலிகைகளை நன்கு உலர (காய) வைத்து, அனைத்து மூலிகைகளையும் சம பங்கு அளவில் எடுத்து கலந்து, அரைத்துப் பொடியாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
அரைத்து எடுத்து வைத்துள்ள அந்த பொடியை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு, அந்த நீரை இதமான சூட்டுக்கு ஆற வைத்து பருக வேண்டும்.
முக்கிய குறிப்புகள்
- நிலவேம்பு கஷாயத்தை தயாரித்த நான்கு மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும். இல்லையேல் அதன் பயன் இருக்காது. மேலும் பத்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். பத்து வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தர வேண்டும் எனில், மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு கொடுங்கள்.
- டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், காலை, மாலை என இரு வேளைகள் 30 மில்லி நிலவேம்பு கஷாயத்தை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு குடித்து வந்தால் விரைவாக குணமடையலாம்.