மூலிகைகள்

நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை

வல்லாரை இதய வடிவ வட்ட இலைகளை உடையது. தரையோடு படரும் சிறு செடியினம். இதன் இலை மருத்துவ பயனுடையது. தமிழகமெங்கும் வளரக்கூடியது. உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும். தாது பலம் பெறவும் வல்லாரை முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்க

அடிக்கடி வல்லாரை கீரையை சமைத்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூளைக்கு பலத்தை தரும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. சிந்தனை திறனை அதிகரிக்கிறது.

வாயு, வாதம்,அண்ட வீக்கம் குணமாக

இலையை காயவைத்து பொடியாக்கி 5 கிராம் அளவு தினமும் இருவேளை நெய்யில் கலந்து சாப்பிட்டு வர வாயு, வாதம்,அண்ட வீக்கம் ஆகியவை தீரும்.

தொண்டை கம்மல், சளி குணமாக

வல்லாரை கீரை, தூதுவேளை இரண்டையும் சம அளவு எடுத்து சாறு பிழிந்து 5 துளிகளை பாலில் கொடுத்து வர தொண்டை வலி, தொண்டை கம்மல் குணமாகும். சுவாச உறுப்புகளில் சளி தேங்கி இருந்தாலும் அதை குணமாக்கும்.

விரைவாதம் தீர

வல்லாரையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி விரைவாதத்துக்கு கட்டிவர தீரும் . மேலும் யானைக்கால், கண்டமாலை ஆகியவற்றிற்கு கட்டி வர தீரும்.

மெலிந்த உடலுக்கு

வல்லாரையை சாறு பிழிந்து அதில் அரிசித்திப்பிலியை ஊறவைத்து அரைத்து பொடியை 5 கிராம் அளவு நெய்யில் கலந்து தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வர மெலிந்த உடல் தேறும். மேலும் மூளை நல்ல சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

மன நோய்கள் குணமாக

அதிகாலை 3 வல்லாரை இலைகளை வெறும் வயிற்றில் மென்று தின்று 4 மணி நேரத்திற்கு பிறகு பால் அருந்திவிட்டு உப்பு, புளி அதிகம் சேர்க்காமல் உணவுகளை சாப்பிட்டு வர மன நோய்கள் குறைந்து மனது அமைதிக்கு திரும்பும்.

இதய நோய்கள் தீர

  • வல்லாரை இலை – 3
  • அக்ரோட் பருப்பு – 1
  • பாதாம் பருப்பு -1
  • ஏலக்காய் – 1
  • மிளகு – 3
  • கற்கண்டு – 10 கிராம்

இவற்றை ஒன்றாக அரைத்து பாலில் கலந்து தினமும் இருவேளை 3 வாரங்களுக்கு சாப்பிட்டு வர இதயநோய்கள் நீங்கும்.

உடல் வலிமை பெற

வல்லாரைக்கீரையை 100 கிராம் அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி அத்துடன் 100 கிராம் அமுக்கிரா பொடியை கலந்து வைத்துக்கொண்டு 5 கிராம் அளவு எடுத்து தேனில் குழைத்து தினமும் 2 வேளை 48 நாட்கள் சாப்பிட்டு வர உடல் நல்ல வலிமை பெறும்.

பித்த நோய்கள் தீர

  • வல்லாரைக்கீரை – 100 கிராம்
  • நெல்லிக்காய் – 100 கிராம்
  • முசுமுசுக்கை இலை – 100 கிராம்

இவற்றை நன்றாக காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர பித்த நோய்கள், மயக்கம் தீரும்.

வல்லாரை கற்பம்

கற்ப மூலிகைகளில் வல்லாரையும் ஒன்றாக கருதப்படுகிறது. சித்தர்கள் கூறியுள்ள வல்லாரை கற்பம் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

இதை சாப்பிடுவதற்கு முன் பேதிமருந்தை சாப்பிட்டு உடலை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். 5 வல்லாரை இலையை எடுத்து சாறு பிழிந்து சாப்பிடவும். பிறகு உணவையும் சாப்பிடாமல் 4 மணி நேரத்திற்கு பிறகு உப்பு இல்லாத கஞ்சியை பருகவேண்டும்.

அடுத்த நாள் 6 இலைகள், அடுத்த நாள் 7 இலைகள் என ஒவ்வொன்றாக அதிகரித்து 21 நாட்களுக்கு இதுபோன்று செய்து வந்தால். அறிவு கூர்மை அதிகரிக்கும். நல்ல நினைவாற்றல் பெருகும். உடலில் சக்தி அதிகரிக்கும். அழகு உண்டாகும். ஆயுள் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =

error: Content is protected !!